மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் இப்போது மக்களுக்கு பல்வேறு உபதேசங்களைச் செய்ய ஆரம்பித்துள்ளது மின்வாரியம். அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று மக்களுக்கு அறிவுரை கூற ஆரம்பித்துள்ளனர். மின்வாரியத்தின் இந்த பலே யோசனைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் நம்மால் முடிந்த சில பல யோசனைகளை மின்வாரியத்திற்குத் தெரிவிப்போம்.. இதுவும் கூட கரண்ட்டை மிச்சப்படுத்த உதவும் என்ற நம்பிக்கையில்...
# அரசியல் தலைவர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அரசியல்வாதிகளுக்கும் இந்த அட்வைஸை விரிவுபடுத்தலாம். தேவைப்பட்டால் தனிச் சட்டமே கூட கொண்டு வரலாம். காரணம், பொதுமக்களை விட அதிக அளவில் ஏசியில் புழங்குவது இவர்கள்தான்.
# 2 மாதங்களுக்கு தமிழகத்தில் எங்குமே அரசியல் பொதுக்கூட்டங்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கலாம்.
# தலைவா வா, தங்கத் தமிழே வா என்ற ரேஞ்சுக்கு ஆங்காங்க மின்னும் விளக்கொளியில் அலங்காரம் செய்து தட்டி வைப்பது, போர்டு வைப்பது இத்யாதி இத்யாதி விவகாரங்களை 2 மாதங்களுக்கு தடை செய்து உத்தரவிடலாம்.
# அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான டியூப் லைட்டுகள், சீரியல் செட்டுகள், விளக்கொளியில் ஜொலிக்கும் கட் அவுட்கள் ஆகியவற்றுக்கு 2 மாதத்திற்கு வேண்டுமானால் தடை விதிக்கலாம்.
# முக்கியத் தலைவர்களின் வீடுகளுக்கு மட்டும், அவர்கள் குடியிருக்கும் தெருவுக்கு மட்டும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை ஒரு இரண்டு மாதத்திற்குத் தடை விதித்துப் பார்க்கலாம்.
# அரசியல்வாதிகள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் ஏசி மெஷினே பொருத்தக் கூடாது என்று கூட உத்தரவிடலாம். எல்லாம் 2 மாசத்துக்குத்தானே...!
# இந்த 2 மாத ஏசி நிறுத்தம், அயர்ன் பாக்ஸ் நிறுத்தம், இன்டக்ஷன் ஸ்டவ் நிறுத்தம், வாட்டர் ஹீட்டர் நிறுத்தம் ஆகிய உத்தரவுகளை அமைச்சர்கள் அளவிலும் கூட விரிவுபடுத்தி தமிழக மக்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கலாம்.
# பிறகு ஆடம்பரமாக நடத்தப்படும் கட்சிக்காரர்கள் கல்யாணங்களின்போது பெருமளவில் விளக்குகளைப் போட்டு கட் அவுட் வைப்பது, தலைவர்களின் சீரியல் செட் கட் அவுட் வைப்பது, சாலை நெடுகிலும் டியூப் லைட்டுகளைக் கட்டுவது போன்றவற்றையும் கூட 2 மாதத்திற்குத் தடுத்துப் பார்க்கலாம். முடிந்தால் கல்யாணமே பண்ணாதீங்க, 2 மாதத்திற்கு என்று கூட அட்வைஸ் கொடுத்துப் பார்க்கலாம்.
இப்படி பல்வேறு வகையிலும் கூட மின்சாரத்தை நாம் சிக்கணமாக சேமித்து தமிழக மக்களுக்கு விரிவான முறையில் வழங்க முடியும். மின்வாரிய அதிகாரிகள் இதுகுறித்தும் யோசித்தால் நல்லது!